'வாள்" பெற்ற பெருவாழ்வு !......

                                                                இ.இராஜேஸ்கண்ணன்



ஆண்டவன் கையில் ஆயுதமாய் இலங்குகையில்

ஆணவம் கொன்றேன் அசுரரை வென்றேன்!....


புவியாண்ட மன்னர் உறையகத்து உறைந்தகாலை

புகழ்மாந்தி மன்னர் தலைக்கனம் ஏறவைத்தேன்!....


இனவெறியர் கையில் இசைந்திருந்த நாளில்

நிணங்குருதி சொட்டப் பிணங்குவித்தேன் பாரில்!....


நிசமில்லாக் 'ஹீரோ"க் கரம் பற்றும்போதில்

விசமூட்டிப் பிஞ்சு மனவன்மம் வளர்த்தேன்!....


'ஆவாவின்" கையில் நானனேறியமர்ந்த நாளாய்

யாரை விட்டேன்நான் ஊரை உறையவைத்தேன்!.....


பீதிகொடுத்தேன், பிஞ்சுகளைக் கொன்றொழித்தேன்,

நாதியிலா நலிந்தோரை நாணமின்றித் தோற்கடித்தேன்,

பாதிவழி போகமுன்னர் பறித்தேன் யௌவனத்தை,

புகைபோதை துணையோடு புகழோங்கி நான் நிமிர்ந்தேன்!....


கோதில்விழுச் செல்வமொல்லாம் கொன்றே யொழித்திட்டேன்

கொலை கொள்ளை வரைசெல்லும் 'கொலு"வதனை நான்கொடுத்தேன்

நிலைமாறு காலத்தின் நிம்மதியை நான் தொலைத்தேன்

நிலைமாற வேண்டுமென்றால் 'கடவுள்" என்னைக் காவவேண்டும்!......


அசுரரை அழிப்பதொன்றும் அவ்வளவு சுலபமில்லை

கடவுளே கவனம்!... என் துணையின்றித் திரியாதீர்!....


Comments

Popular posts from this blog

கொட்டிச் சிந்திக் காசைவிட்டு!......